கிடை
"ஆட்டெரு அவ்வாண்டு, மாட்டெரு மறு ஆண்டு" - பழமொழி
ஆடு மாடுகளை மந்தை மந்தையாக வைத்திருப்பார்கள். பகற்பொழுதில் மேயவிட்டு நீர்பருகவிட்டுப் பேணுவர். இரவுப் பொழுதில் நிலத்தில் படுக்கவிடுவர். இதற்குக் 'கிடை' என்று பெயர். 'கிடையாடு', 'கிடைமாடு' என்பதே அவற்றுக்குப் பெயர். அவை வேற்றூர்களிலிருந்து ஓட்டி வரப்படுவதால் 'வரத்தாடு', 'வரத்துமாடு' எனப்படும்.
ஆடு மாடுகள் இரவு படுத்திருக்கும்போது சிறுநீர், சாணம் ஆகியவற்றை ஒரே வயலில் இடுவதால், அந்த வயலுக்கு நேரடியான இயற்கை உரம் கிடைக்கிறது. இந்த நடைமுறை காவிரிப் பாசன மாவட்டங்களில் இன்றும் நடைமுறையில் காணப்படுகிறது. இவ்வாறு கிடைபோட வயலின் உரிமையாளரிகளிடம் கிடைகாரர்கள் கட்டணம் வசூலிப்பர்.
நீண்ட காலம் பசுமாடு கன்று போடாமல் இருந்தாலும் கிடைக்கு அனுப்பப்படும். இங்கு பல காளை மாடுகளும் இருப்பதால், பசுக்கள் விரைவில் சினை பிடித்துக் கன்றுகளை ஈனும். மாட்டுமந்தைக்கென விடப்படும் பொலிகாளை 'கிடை ஏறி' எனப்படும். கிடையேறியினால் பெயர் பெற்ற ஊரே 'கிடேறிப்பட்டி' ஆகும்.
கிடேறி = கிடை+ஏறி
(படங்கள் : திருச்சி திருவெறும்பூரில் பறவைப் பார்த்தலின்போது எடுக்கப்பட்டவை.)
- பாலா பாரதி
Comments
Post a Comment