தோடர்களின் எருமைகள்
தோடர்களின் எருமைகள்
தோடர்கள் எருமைகளை இறைவனுக்கு சமமாக கருதுகின்றனர். அவர்களின் கோயில்களில் எருமையின் கொம்பு அல்லது எருமையின் தலை வடிவம் இடம்பெற்றிருக்கும்.
இவர்களின் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் எருமைகள் பங்குபெறுகின்றன. தோடர் இனப்பெண் வாசமல்லி அவர்கள் கூறுகிறார்:
"எங்கள் சமூகத்தில் பிறப்பிலிருந்து இறப்பு வரை எருமை மாடுகள் கூடவே வரும். பெண்களுக்கு எருமைகளை சீதனமாக கொடுப்போம். குழந்தைப் பிறந்தால் அந்தக் குழந்தைக்கும் தாய்மாமனுக்கும் மாடு கொடுப்போம். எருமை நெய் இல்லாமல் கோயில்களில் விளக்கு ஏற்ற மாட்டோம். நாங்கள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணமே தோடா எருமைகள்தான். மூலிகைச் செடிகளைத் தின்று வளர்வதால் அவை தரும் பாலைக் குடிக்கும் எங்களை நோய்கள் அண்டுவதில்லை.
எங்கள் சமூகத்தில் யாராவது இறந்துவிட்டால் அவருக்கு நெருக்கமானவர்கள் தங்களது வீட்டில் உள்ள எருமைகளில் ஒன்றை மேற்கு திசை நோக்கி துரத்தி விடுவர். அது இயற்கையாக மரணமடைந்து, இறந்தவர்களுக்கு இன்னொரு உலகத்திலும் பால் கொடுக்கும் என்பது எங்கள் முன்னோர்களின் நம்பிக்கை. காலப்போக்கில், மாடுகளை மேற்கு திசை நோக்கி துரத்துவதற்கு பதிலாக இறந்தவர்களின் சவக்குழிக்கு அருகிலேயே கொன்று புதைக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதைத்தான் எட்டு ஆண்டுகளாக தீவிர பிரச்சாரம் செய்து தடுத்து நிறுத்தி இருக்கிறோம். இப்போது பெரும்பாலும் எருமைகளை யாரும் கொல்வதில்லை. என்றாலும் எங்காவது ஒரு சிலர் இன்னும் பழமையிலிருந்து விடுபட முடியாமல் எருமைகளை கொன்றுவிடுகிறார்கள். அவர்களையும் நெறிப்படுத்தத் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்".
சக மனிதர்களைப் பற்றிக்கூட சிந்திக்காதவர்கள் உள்ள இந்தக் காலத்தில், தங்களை வாழ வைக்கும் தெய்வங்களான எருமை மாடுகளைக் காப்பாற்ற தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் வாசமல்லி அவர்களுக்குவாழ்த்துகள்.
அந்த எருமைகளில் சில நமக்கும் நண்பர்கள் ஆகிவிட்டன.
- பாலா பாரதி
Comments
Post a Comment