வள்ளலார்


வள்ளலார் என்று அழைக்கப்படும்இராமலிங்க அடிகளார் அக்டோபர் 5,1823  இம் ஆண்டு சிதம்பரம் அருகில் உள்ள மருதூர் எனும் கிராமத்தில் பிறந்தார்.

இவர் இறக்கவில்லை என்று நம்பப்படுகிறது. இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்.  "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில்ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.
பெருமான் வடலூரில் சத்திய ஞான சபையை அமைத்தார். 1871 ஆம் ஆண்டு சபையை கட்ட ஆரம்பித்தனர். 25.1.1872, தை மாதம் 13 வியாழக்கிழமை பூச நாளில் முதன் முதலாகச் சபையில் வழிபாடு தொடங்கப்பட்டது. அனைவரும் அருட்பெருஞ்சோதி தரிசனத்தை கண்டு களித்தனர்.



தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் .சிதம்பரத்திற்கு வடமேற்கே இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில், கிராமக் கணக்கராக இருந்தவர் இராமய்யா என்பவர் .அவருக்கு ஐந்து மனைவியரும் மகப்பேறு இன்றி ஒருவர் பின் ஒருவராக இறக்கவே ,இராமய்யா அவர்கள் ஆறாவது மனைவியாக,சென்னையை அடுத்த சின்னக்காவணத்தில் பிறந்து வளர்ந்த சின்னம்மையை மணம் புரிந்தார் .அவர்களுக்கு சபாபதி,பரசுராமன் ,என்னும் இரு ஆண் மக்களும் உண்ணாமுலை,சுந்தராம்பாள் என்னும் இரு பெண் மக்களும் பிறந்தனர்.
ஒரு நாள் இராமய்யா இல்லாத நேரம் ,அவர் வீட்டிற்கு சிவனடியார் உருவத்தில் இறைவன் சென்றார்.அம்மா ! பசிக்கிறது உணவு தாருங்கள் !என்று சிவனடியார் கேட்க !,அக்குரல் கேட்டு வெளியே வந்த சின்னம்மை நமஸ்காரம் செய்து ,உள்ளே வாருங்கள் என்று அன்புடன் அழைத்து அமரவைத்து இலைப்போட்டு உணவு பரிமாறினார் .''பசி நீங்கிய சிவனடியார்'' என்னுடைய பசியை போக்கிய உனக்கு,உலகம் எல்லாம் உள்ள அனைத்து ஜீவன் களுடைய பசியைப் போக்கும் ஒரு ஞானக் குழந்தை பிறக்கும் என்று ஆசீர்வாதம் செய்துவிட்டு வெளியே சென்றார் .சின்னம்மை பின் தொடர்ந்து வெளியே வந்து பார்த்தார் சிவனடியாரை காணாவில்லை மாயமாக மறைந்து போய் விட்டார் .

இராமய்யா வந்தவுடன் நடந்த விபரங்களை சின்னம்மைச் சொல்ல இருவரும் இறைவனிடம் சென்று, இது என்ன சோதனை ! என்று முறையிட்டார்கள் .சிவனடியார் சொல்லிய வண்ணமே பத்தாவது மாதத்தில், 5--10--1823-,ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் நாள்,சுபானு ஆண்டு புரட்டாசித் திங்கள் இருபத்தோராம் நாள் ஞாயிற்றுக் கிழமை மாலை, 5--30, மணியளிவில் ஐந்தாவது மகவாக அவதரித்தார், அக் குழந்தைக்கு இராமலிங்கம் என்னும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

சிதம்பர வழிபாடு !

பிறந்த குழந்தையை முதன் முதலில், ஐந்தாவது மாதத்தில் மனைவி மக்களுடன் சிதம்பரம் சென்று வழிபட சென்றார்கள்.சிற்சபையில் நடராஜப் பெருமானை வழிபட்டபின்,சிதம்பர ரகசியத்திற்காக அனைவரும் அதன்முன் வந்து நின்றனர்.திரையை நீக்கி அப்பைய தீஷிதர், தீப ஆராதனை காட்டினார் .சின்னம்மைக் கையிலிருந்த ''ஐந்து மாதக் குழந்தை இராமலிங்கம்,கலகல வென்று சிரித்தது'' .அந்த சிரிப்பொலி நடராஜ சன்னதியே அதிர வைத்தது. அதைக் கண்ட அப்பைய தீஷிதர் அக்குழ்ந்தையை வாங்கி நடராஜர் முன் படுக்க வைத்து காலில் விழுந்து வணங்கி ,இக்குழந்தை சாதாரணக் குழந்தை அல்ல ! இது ஒரு ஞானக் குழந்தை என்று போற்றி, புகழ்ந்து,வாழ்த்தி பிரசாதம் கொடுந்து வழியனுப்பி வைத்தார். ஐந்து மாதக் குழநதையாக இருக்கும்போதே ,உலக ரகசியத்தை சிதம்பர ரகசியத்தின் வாயிலாக இறைவன் காட்டிவிட்டார் என்பதை அவர் எழுதிய திருஅருட்பாவில்,பதிவு செய்துள்ளார் .

கன்னிச் சொற்பொழிவு !
சென்னையில் உள்ள சோமு செட்டியார் என்பவர், ஒவ்வொரு வருடமும் புராணச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்து வைத்து இராமலிங்கத்தின் அண்ணார் சபாபதி அவர்களை சொற்பொழிவு செய்ய அழைப்பார்,..அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லை ,தம்பி இராமலிங்கத்தை அழைத்து நீ போய் ஒன்று இரண்டு பக்தி பாடல்களை பாடிவிட்டு வா ,நாளை நான் வருவதாக சோமு செட்டியார் இடம் சொல்லிவிட்டு வா என்று அனுப்பி வைத்தார் .
இராமலிங்கம் அன்று நிகழ்த்திய கன்னிச் சொற்பொழிவு.... ''புயல் மழைப்போல் அருள் மழை அருவிப்போல் கொட்டியது ''  அவையோர் அனைவரையும் மெய்மறக்க செய்தது .அனைவரும் அதிசயித்துப் போகும் அளவிற்கு, ''உலகு எல்லாம் அறிந்து ஓதற்கு அறிபவன் '' என்னும் ஒரு வார்த்தைக்கு மட்டும்,இரவு நெடுநேரமாகியும் அவரே நிறுத்தும் அளவிற்கு சொற்பொழிவு ஆற்றினார் .அன்று முதல் அவரையே தொடர்ந்து சொற்பொழிவு ஆற்றுமாறு அனைவரும் வேண்ட, அதற்கு இசைந்து சொற்பொழிவு ஆற்றினார் .அந்த சொற்பொழுவு சென்னை நகரம் முழுவதும் பரவியது .அன்றுமுதல் சென்னையில் உள்ள படித்த பண்டிதர்கள், சான்றோர்கள்,படித்தவர் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் அணிதிரண்டு அவர் பின்னாடி செல்ல ஆரம்பித்தார்கள்.அவருக்கு அப்போது ஒன்பது வயதாகும்.

மாணாக்கர்கள் !

சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த பன்மொழிப் புலவர் வேலாயுதம் என்பவர் ,இராமலிங்கம் புலமையில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாமல் கடிய நடையில் தாமே நூறு செய்யுள்களை இயற்றிக் கொண்டுவந்து ,இவை சங்ககாலச் செய்யுள்களில் உள்ள பழைய ஏடுகளில் காணப்பட்டன என்று இராமலிங்கத்திடம் காட்டினார்.அவற்றைக் கண்ணுற்று இவை சங்கக் காலப் பாடல்கள் அல்ல ,சங்கப் பாடல்களில் இவ்வளவு குற்றம் இருக்காது .இவைப் பொருள் இலக்கணம் தெரியாத கற்றுக் குட்டி பாடியவை எனக் கூறினார் .அதனைக் கேட்டதும் வேலாயுதனார் தம் செய்கைக்கு நாணி தலைகுனிந்து உண்மையைக் கூறி சரணடைந்தார் .அன்றிலிருந்து தன்னுடைய் பணியை விட்டுவிட்டு ,இறுதி வரை இராமலிங்கத்தின் தலைமைத் தொண்டராக, சீடராக இருந்தார் அவருடன் ஆயிரககணக்கான தொண்டர்கள் பின் தொடர்ந்தனர்.

சங்கராச்சாரியார் சந்தேகம் தெளிதல் !



சமஸ்கிருத மொழியில் உள்ள வேத தோத்திரப் பாடல்களில் சிலவற்றிற்கு சங்கராச்சாரியார் அவர்களுக்கு பொருள் விளக்கம் தெரியவில்லை.அவற்றை யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது என்று பலமுறை சிந்தித்துக் கொண்டே இருந்தார்.அவருடைய சீடரில் ஒருவர்...சுவாமி ! சென்னையில் உள்ள கந்த கோட்டத்தில் இராமலிங்கசுவாமி என்பவர் ஒருவர் வந்து இறைவனைப் பற்றி பாடிக் கொண்டே இருப்பார் .அவர்களைக் கேட்டால் சந்தேகம் தெளிவடையும் என்று கூறினார் .அதற்கு அவர் ! எனக்கே தெரியாத விளக்கத்தை, ..பள்ளிகூடம் செல்லாது படிக்கத்தெரியாத அவருக்கு என்னத் தெரியப்போகுது என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு ,...இருந்தாலும் உன்னுடைய விருப்பம் போல் ஏற்பாடு செய் ! பார்க்கலாம் என்று சொல்ல ! இருவரையும் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கினார்கள் .


இருவரும் பலமணிநேரம் உரையாடிவிட்டு, இராமலிங்கம் அவர்கள் சமஸ்கிருத மொழியில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை தெளிவாக விளக்கினார் அதைக் கேட்ட சங்கராச்சாரியார் மெய் சிலிர்த்து ஆச்சரியப்பட்டுப்  போனார்.சம்ஸ்கிருத மொழியில் இவ்வளவு பெரிய உண்மைகள் இருக்கிறதா என்பதை அறிந்த அவர் ''உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும்  சமஸ்கிருத மொழி தாய் மொழிதானே ?'' என்று இராமலிங்க பெருமானிடம் கேட்டார்.அதற்கு அவர் ஆம் ! ..சமஸ்கிருதம் தாய் மொழிதான் ! அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் .ஆனால்..தாய் என்று ஒன்று இருந்தால் ,தந்தை என்று ஒன்று இருக்கவேண்டும் அல்லவா ?

சமஸ்கிருதம் தாய் மொழி என்றால் ! ''தமிழ் தந்தை மொழி "' என்று தமிழுக்கு முதலிடம் கொடுத்தார்.அதைக்கேட்ட சங்கராச்சாரியார் வாய் அடைத்து மவுனமானார்.இந்த சந்திப்பின் உண்மைகள் சென்னை நகரம் முழுவதும் பரவியது..இராமலிங்கத்தின் மீது அளவில்லா பக்தியும் பாசமும் கொண்டு மக்கள் அதிகமாக அவர் பின் தொடர்ந்தனர் .

தண்ணீரால் விளக்கு எரித்தது !

கருங்குழி வீட்டின் அறையில் ஒருநாள் இரவு ,இராமலிங்கப் பெருமான் அவர்கள் ''திருஅருட்பா ''எழுதிக் கொண்டு இருக்கும் போது விளக்கு மங்கவே எண்ணெய்ச் சொம்பு என எண்ணித் தண்ணீர்ச் சொம்புவை எடுத்து விளக்கில் வார்த்தார் விளக்கும் நன்றாக இரவு முழுவதும் எரிந்தது.தண்ணிரில் விளக்கு எரிந்த அவ் அற்புதத்தை சென்னை நகரில் உள்ள தன்னுடைய அன்பர்களுக்கு பாடல் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளார் .இவைப் போல் மேலும் பலப் பல அறிய அற்புதங்களை இறைவனுடைய அருளால் கிடைத்தது என்பது அவருக்கு தெரியவருகிறது .எதையும் அவர் வெளியே சொல்லாமல்.காட்டாமல் அருட்பா பாடல்கள் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார்.
அவர் எழுதிய அருட் பாடல்களை முழுவதும் முதல் ஐந்து திருமுறைகளாக தொகுத்து ''திருஅருட்பா''என்னும் தலைப்பில் பேராசிரியர் வேலாயுதம்,மற்றும் அவர்களுடைய அணுக்கத் தொண்டர்கள் சேர்ந்து 1867.ஆம் ஆண்டில் வெளியிட்டார்கள் .அவை மக்கள் மத்தியிலே பெரும் வரவேற்பைப் பெற்றது.இராமலிங்கம் என்னும் பெயரை திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் பெயராக வேலாயுதம் அவர்கள் முன்மொழிய அன்பர்கள் எல்லாம் அவ்வாறே ஏற்றுக் கொண்டார்கள் .ஆனால் வள்ளலார் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை, அவை ஆராவாரத்திற்கு அடுத்த பெயர் என்பதால் ஏற்றுக் கொள்ளவில்லை.அவர் சித்திபெறும் வரை ,சிதம்பரம் இராமலிங்கம் என்றே தமது பெயரை எழுதி கொண்டு வந்தார் .மக்கள் உள்ளங்களில் ''திரு அருட்பிரகாச வள்ளலார்'' எனற பெயர் நிலைத்து விட்டது.

நீதி மன்றம் செல்லுதல்.!


வள்ளலார் எழுதியது திருஅருட்பா அல்ல ,அவை மருட்பா என்று ,சமயவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ,யாழ்பாணத்தில் உள்ள ஆறுமுக நாவலரை அழைத்து வந்து மஞ்சகுப்பம் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.வள்ளலாருக்கு சம்மன் வந்தது ,சம்மனை வாங்க மறுத்து வேலாயுதம் அன்பிற்கு கட்டுப்பட்டு கோர்ட்டு சம்மனை கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொண்டார்.நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது இராமலிங்கம் இராமலிங்கம் என்று குரல வந்தது ..திடீர் என்று இராமலிங்கம் வந்து நின்றார்  .நீதிபதி முதற்கொண்டு அனைவரும் எழுந்து கை கூப்பி வணக்கம் செய்தனர்...நீதிபதியும் தன்னையறியாமல் எழுந்ததை உணர்ந்து சமாளித்துக் கொண்டு,ஆறுமுக நாவலரைப் பார்த்து .நீங்கள் தானே வழக்குத் தொடர்ந்தவர் என்று கேட்க ஆமாம் என்று அவர் பதில் சொல்ல ,இராமலிங்கம் வந்தவுடன் அவரைப் பார்த்து எழுந்து வணக்கம் சொன்னீரே, ஏன் ? என்று கேட்க ,அதற்கு அவர் பெரியவர்,உயர்ந்தவர்,அனைவராலும் மதிக்கத்தக்கவர் ஆதலால் வணக்கம் சொன்னேன் என்று சொல்ல ..நீங்களே பெரியவர், உயர்ந்தவர் என்று ஒப்புக் கொண்டதால் ,அவர் எழுதியது ''திருஅருட்பா'' தான்,மருட்பா அல்ல என்று தீர்ப்பு வழங்கினார்.இந்த செய்தி தமிழகமெங்கும் தீப்போல் பரவியது .அவர் புகழ் மேலும் அதிகமாக மக்கள் மத்தியில் பரவலாயிற்று .
ஆனால் வள்ளலார் நீதி மன்றம் செல்லவில்லை, வடலூரில் உள்ள தருமச்சாலையில் தன்னுடைய அன்பர்களிடம் உரையாடிக்கொண்டு இருந்தார் என்ற செய்தி நீதிமனறத்தில் இருந்த வந்த அன்பர்கள் அறிய, வள்ளலார் இதை வெளியில் சொல்லவேண்டாம் என்று அடக்கிவிட்டார்.நீதி மன்றத்திற்கு சென்றது வள்ளலார் உருவில் இறைவனே சென்றார் என்பது உண்மையாகும் .

சித்திப் பெற்ற இடம் !

வள்ளல்பெருமான் சொல்லியதோடு இல்லாமல்,சொல்லிய வண்ணம் வாழ்ந்து காட்டினார் .வடலூருக்கு தெற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்திற்கு  சென்று அங்கேயே  உறையத் தொடங்கினார் அவர் தங்கி இருந்த இடத்திற்கு ''சித்திவளாகத் திருமாளிகை'' என்று பெயர் .அவர் அங்கே ஆயிரகணக்கான மக்கள் மத்தியில் நான் இப்போது இந்த அறையில் சென்று இறைவனோடு இரண்டற கலக்கப்போகிறேன் ,பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள் ''இந்தக்கதவை சாத்திக் கொள்ளுங்கள் ,அப்படி யாராவது  பார்க்க வேண்டும் என்று பார்க்க நேர்ந்தால் ஆண்டவர் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் ,வெறு வீடாகத்தான் இருக்கும் ''என்றும் ,நீங்கள் அனைவரும் நான் சொல்லிய வண்ணம் உங்கள் வாழ்க்கையில் ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடைபிடியுங்கள் நீங்களும் என்னைப் போன்ற பெரிய பேரின்ப ஆன்ம லாபத்தை அடைவீர்கள் இது சத்தியம் ,இது சத்தியம் .என்று சொல்லி உள்ளே சென்று அமர்ந்து கொண்டார்,சித்தி பெற்ற ஆண்டு 30--1--1874,--ஸ்ரீமுக வருடம் தைமாதம் பத்தொன்பதாம் நாள் வெள்ளிக்கிழமை ,அப்போது அவருக்கு வயது ஐம்பத்து ஒன்றாகும் .

வள்ளலாரின் செய்தியை அறிந்த கடலூர் மாவட்ட ஆங்கிலேய ஆட்சியாளர் மற்றும் தாசில்தார் போன்ற அதிகாரிகள் வந்து மக்கள் முன்னிலையில் கதவை திறந்து பார்த்தார்கள் வெறுவீடாகத்தான் இருந்தது .வள்ளலார் இறைவனோடு கலந்து பேரின்ப சித்தி என்னும் பெருவாழ்வு பெற்றுவிட்டார் ,என்பதை அரசு பதிவேட்டில் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.இவை யாவும் உண்மை செய்திகளாகும்..

வள்ளலார் அவர்கள்.சித்திப் பெற்றபின் அவர் எழுதிய ஆறாம் திருமுறை என்னும் திருஅருட்பா வெளியிடப்பட்டது..அதில் அனைத்து உண்மைகளும் தெள்ளத்தெளிவாக உள்ளன.''உலக ரகசியங்களையும்,.உயிர்களின் பிறப்பு இறப்பு ரகசியங்களையும்,கடவுள் யார் என்ற உண்மைகளையும்.,உலகம் முழுவதும் சாதி,சமயம்,மதம்,அற்ற சகோதர உரிமையுடன் வாழ வேண்டும்.உலகம் முழுவதும் அமைதி நிலவவேண்டும்''..''ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை ''அனைவரும் கடைபிடிக்க வேண்டும் .''ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு....உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு'' என்பதை மிகவும் வலியுறுத்தி எழுதி வைத்துள்ளார்.
மேலும் ;--உரைநடை நூல்கள் அதிகம் இல்லாத காலத்தில் மனுமுறை கண்ட வாசகம்,...ஜீவகாருண்ய ஒழுக்கம் ,...ஒழிவியல் ஒடுக்கம்,...தொண்டமண்டல சதகத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் உரைநடை,...சின்மயதீபிகை...போன்ற உரைநடை நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.


தமிழ் நாட்டின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வள்ளல்பெருமான் ஒருவரே .மேலும்,தமிழ் நாட்டில் முதன்முதலாக திருக்குறள் வகுப்பு நடத்தியவரும் அவரே ! நூல் ஆசிரியராக ,உரை ஆசிரியராக ,பதிப்பாசிரியராக ,போதக ஆசிரியராக,,ஞான ஆசிரியராக ,வியாக்கியான கர்த்தராக ,சித்த மருத்தவராக ,அதற்கும் மேலே கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர் .எனப் பன்முகங் கொண்ட அருளாளர் வள்ளல்பெருமான் அவர்கள்.சுமார் ஆறாயிரம் அருட்பாடல்களை எழுதி வைத்துள்ளார்.

நமது இந்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வள்ளலாரின் வாழ்க்கை வரலாறுகளையும்.கொள்கைகளையும் ,பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் பாடப்புத்தமாக கொண்டு வந்தால் எதிர்கால மாணவர்கள்.ஒழுக்க நெறியோடு வாழ்வதற்கு வழிகாட்டுதலாக இருக்கும் என்பது சன்மார்க்க சான்றோர்களின் விருப்பமும் வேண்டுதலுமாகும்.

Comments

Popular posts from this blog

தோடர்களின் எருமைகள்

தோடர்களின் வில்

மாவளியோ...மாவளி....